ஹஜ்ஜிப் பெருநாள்


ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.
மதீனாவில் திருவிழாக்கள்
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனா வாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற் காகவும்.பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள். அப்போது நபிகளார் (ஸல்) அவர்கள்,
இரு பெரு நாட்கள்
‘அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!) மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் (ரலி) தெரிவித்தார்கள். (ஆதாரம் : அபூ தாவூது நஸயீ)
ஈதுல் ஃபித்ர் ரமளான் மாதம் முழுவதும் இறைவனுக்காக நோன்பு நோற்றபின் ஷவ்வால் மாதம் முதல் பிறை பார்த்தபின்னர் கொண்டாடப்படும் பெருநாளாகும். ரமளான் மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்பு அமைந்துள்ளது.
ஈதுல் அள்ஹா இறை ஆணைப்படி நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் தம் மகன் இஸமாயீல் (அலை) அவர்களைப் பலியிட முன்வந்த இந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் கொண்டாடப்படும் பெருநாளாகும்.
குர்பானி கொடுக்கப்படுவதால் ‘ஈதுல் அள்ஹா’ என்றும் ‘குர்பான் ஈத்’ என்றும் எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் ‘ஈத் பைராம்’ என்றும், மாட்டை றுத்துப் பலியிடுவதால் ‘பகர் ஈத்’ ( பக்ரீத்) என்றும் பல பெயர்கள் வழங்கப் படுகின்றன
பெருநாளை எவ்வாறு கொண்டாடுவது ?
நோன்புப் பெருநாளுக்கும், ஹஜ்ஜுப் பெருநாளுக்கம் ஒரே விதிகள் தான்! என்றாலும் இரண்டிலும் சிறிது வேறுபாடுகள் உள்ளன. இரு பெருநாட்களைப் பற்றியும் அறிவது அவசியமாகும்.
1. .பெருநாளன்று ஒவ்வொரு முஸ்லிமும் குளித்துப் புத்தாடை புனைவது ஸுன்னத்தாகும். ஆடை அணிவதில் ஆடம்பரம் கூடாது.
தொழுகைக்குச் செல்லு முன் இப்னு உமர்(ரலி) அவர்கள் குளித்துவிட்டுச் செல்வார்கள். (அறிவிப்பவர் : நாஃபிஹ் (ரலி) ஆதாரம்: முவத்தா.
பெருமானார் (ஸல்) அவர்களின் சுன்னத் ஒவ்வொன்றையும் தவறாது கடைபிடிக்கும் இப்னு உமர்(ரலி) அவர்கள் ஈதுப்பெருநாள் தொழுகைக்குப் புறப்ப:டுமுன் குளிப்பார்கள். அவர்கள் இருபெருநாட்களுக்கும் ஆடைகளில் மிக அழகான ஆடையை உடுத்துபவர்களாக இருந்தார்கள். என இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (ஸாதுல் மஆத் 1-442)
2. . ஆண்கள் நறுமணம் பூசிக்கொள்வது நபிவழியாகும்.
3. .பெண்கள் புத்தாடை அணியலாம். ஆனால் நறுமணம் போன்ற வாசனைத் திரவியங்கள் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
4. .பெண்களும் பெருநாள் தொழுகைக்காக ‘ஈத்காஹ்’ என்னும் மைதானம் சென்று தொழுது வரவேண்டும்.அவர்கள் ஆண்களுடன் கலக்காது தனியாக ஒதுங்கிச் செல்லவண்டும்.
5. . பெருநாள் தொழுகை ஸுன்னத் முஅக்கதா-
பெருநாள் தொழுகை ஸுன்னத் முஅக்கதா- வலியுறுத்தப்ட்ட ஸுன்னத்தாகும். இது வாஜிப்-கட்டாயத்தொழுகை என்றும் சில இமாம்கள் கூறுகின்றனர். எதுவாயினும் இது முஸ்லிம்கள் நிறைவேற்றவேண்டிய ஒரு முக்கியமான தொழுகையாகும். ஜாபிர் இப்னு ஸமூரா (ரலி) ஜாபிர் இப்னு ஸமூரா (ரலி) இதை தவறவிடாது தொழுவதற்கு ஆண் பெண் இருபாலரும் முக்கியத்துவம் வழங்கவேண்டும்.
6. பெண்கள் சிறுவர்களின் மீதும் கடமை
1.மாதவிடாய்,பிள்ளைப்பேறு, இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட பெருநாள் தொழுகை நடை பெறும் முஸல்லா-ஈத்காஹ்- திடலுக்கு வருகை தந்து பங்கேற்பதும் அங்கே நடைபெறும் குத்பாப் பேருரையைக் கேட்பதும் ஸுன்னத்தாகும். இவர்கள் தொழாமல் அங்கே அமர்ந்திருக்கவேண்டும்.
உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-
பருவமடைந்த பெண்களையும்இ மாதவிலக்கான பெண்களையும் நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் துஆவிலும் கலந்து கொள்வதற்காக இரு பெருநாட்களின் தொழுகை(திடலு)க்கு அனுப்பி வைக்குமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஆனால் மாதவிலக்கான பெண்கள்இ தொழும் இடத்தில் (சற்று விலகி) ஓரமாக இருக்கவேண்டும். (ஆதாரம் : புகாரி-974இ முஸ்லிம்)
2. பெருநாள் தொழுகைகளுக்கு சிறுவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும். நபி(ஸல்) அவர்களுடன் சிறுவராக இருக்கும் போது பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புகாரி-975)                                         
7. தொழுத பிறகு உண்ணுவது
நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது பேரீத்தம் பழம் போன்ற உணவுகளை உண்டு விட்டுச் செல்வதும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்குச் செல்லும் போது எதுவும் உண்ணாமல் செல்வதும் ஸுன்னத்தாகும்.
நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்காகச்) செல்ல மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளில் தொழாதவரை சாப்பிடமாட்டார்கள் என இப்னு புரைதா தன் தந்தையின வாயிலாக அறிவிக் கிறார்கள். ( ஆதாரம்: அஹ்மத்இ திர்மிதிஇஇப்னு ஹிப்பான்)
8. தக்பீர் சொல்லுவது!
ஆண்கள் சப்தமாக தக்பீர் சொல்லுவதும் பெண்கள் மெதுவாக தக்பீர் சொல்லுவதும் ஸுன்னத் நபிவழியாகும்.
‘நபி (ஸல்) அவர்கள் பெருநாள் அன்று தமது வீட்டை விட்டுப் புறப்படுவதி லிருந்து தொழுமிடம் வரும் வரை தக்பீர் சொல்பவர்களாக இருந்தார்கள்’ என இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
தக்பீரை கூட்டாக -கோரஸாக- சப்தமிட்டுக் கூறுவதற்கு நபி மொழிகளில் எந்த ஆதாரமும் இல்லை. நபிகளாரின் காலத்திலோ அவர்களின் பிறகு நல்லாட்சி புரிந்த அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) போன்றவர்கள் காலத்திலோ, அதன்பிறகோ அவ்வாறு கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
நோன்புப் பெருநாளின்போது பிறை பார்த்த இரவிலிருந்து பெருநாள் அஸர் வரை தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.
ஹஜ்ஜுப் பெருநாளின் போது பிறை ஒன்பது பஜ்ரிலிருந்து 13 அஸர் வரை தக்பீர் கூறுவது சுன்னத்தாகும்.பிறை ஒன்று முதல் 13  அஸர் வரை இப்னு உமர் (ரலி) அவர்கள் தக்பீர் கூறுபவர்களாக இருந்தார்கள். எனவே ஒன்று முதல் 13  அஸர் வரை தக்பீர் சொல்லலாம்.
தக்பீர் சொல்லும் முறை

ا
لله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்., லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்து.
9. ஈத் தொழுகைக்காக நடந்து செல்வது
பெருநாள் தொழுகைக்காக நடந்து செல்வது நபி வழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் . (ஆதாரம் திர்மிதி)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈத் தொழுகைக்கு நடந்தே சென்று நடந்தே திரும்பி வருவார்கள். அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் ஸஃது(ரலி) ஆதாரம்: இப்புனுமாஜா(1070) ஆகவே, ஈத் தொழுகைக்கு நடந்து செல்வதும், நடந்தே திரும்பி வருவதும் ஸுன்னத்தாகும்.
10. ஈத் தொழுகையின் நேரம்.
சூரியன் உதயமாகி தொழுகை தடுக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு பெருநாள் தொழுகை தொழுவது நபிவழியாகும்(புகாரி,அபூதாவூது,இப்னு மாஜா, ஹாக்கிம்)
குறிப்பு: பொழுது புலர்ந்து சுமார் இருபது நிமிடங்கள் வரை தடுக்கப்பட்ட நேரமாகும்.அதன் பின்னர் தொழலாம்.
11. ஒருவழியாகச் சென்று மறு வழியாக திரும்புவது
பெருநாள் தொழுகைக்குச் செல்லும்போது ஒரு வழியாகச்சென்று மறுவழி யாகத் திரும்புவது நபி வழியாகும்.
நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையிலிருந்து (திரும்பும் போது சென்றவழியாக இல்லாமல்) வேறு வழியாக திரும்பி வருவார்;கள். ஏன ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி)
இன்று சவூதி அரேபியாவில் இந்த நபி வழியைக் கடைபிடிப்பதால் டிராபிக் நெரிசலை தவிர்ப்பதற்கும், ஒழுங்கு முறைகளை கடைபிடிப்பதற்கும் வசதியாக இருப்பதைக் காணமுடிகிறது.
12. அதான்,இகாமத் கிடையாது.
இரு பெருநாள் தொழுகைகளுக்கும் அதான் இகாமத் கிடையாது என ஜாபிர் இப்னு ஸமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி(ஸல்)அவர்கள் அதானும் இகாமத்தும் இல்லாமல் பெருநாள் தாழுகையைத் தொழுதுள்ளார்கள். அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: அஹ்மத், முஸ்லிம், திர்மிதி,நஸயீ, இப்னு மாஜா.
நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒருமுறையல்ல., இருமுறையல்ல.பாங்கும் இகாமத்துமின்றி(பலமுறைகள்) பெருநாள் தொழுகையைத் தொழுதிருக்கிறேன். (அறிவிப்பவர்:ஜாபிர் இப்னு ஸமூரா (ரலி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூது, திர்மிதி,அஹ்மத்)
13 பெருநாள் தொழுகைக்கு முன் பின் ஸுன்னத் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று புறப்பட்டுச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.அதற்கு முன்னும் பின்னும் (அவர்கள் வேறு எந்த தெரீகையையும்;) தொழவில்லை. என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்தார்கள். ஆதாரம் புகாரி – 989.
14. பெருநாள் தொழுகையும் தக்பீர்களும்
நோன்புப் பெருநாள்,ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்களிலும் ஆண்களும் பெண்களும் இந்த சிறப்புத் தொழுகையை நிறைவேற்றவேண்டும்.
பெருநாள் தொழுகை இரு ரகஅத்களாகும்.
முதல் ரகஅத்தில் தனா ஓதிய பிறகு ஏழு தக்பீர்கள் கூறவேண்டும்.கூறும் சமயத்தில் கைகளை உயர்த்தவேண்டியதில்லை. பிறகு அல்ஹம்து மற்றும் வேறு சூராக்களை இமாம் சப்தமிட்டு ஓதவேண்டும்.
இரண்டாம் ரகஅத்தில் அல்ஹம்து ஓதுமுன் ஐந்து தக்பீர்கள் கூறவேண்டும். இதிலும் கைகளை உயர்த்த வேண்டியதில்லை.அதைப்போல தக்பீர்களுக் கிடையில் எதையும் ஓதவேண்டியதில்லை.
ஏழும் ஐந்தும் தக்பீர்கள்!                                                                                                                                                                                        நபி (ஸல்) அவர்கள் (ஈதுல்பித்ர்,ஈதுல் அள்ஹா) ஆகிய இரு பெருநாள் தொழுகைகளில் கிராஅத் ஓதுவதற்கு முன் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர் களும்,இரண்டாம் ரக்அத்தில் கிராஅத் ஓதுவதற்கு முன் ஐந்து தக்பீர்களும் கூறுவார்கள். அறிவிப்பவர்:அம்ர் இப்னு அவ்ஃப் (ரலி), ஆதாரம்: திர்மிதி.
சூராக்கள்                                                                                                                                                             பெருநாள் தொழுகையில் நபி(ஸல்)அவர்கள் காஃப் என்ற அத்தியாயத் தையும், கமர் என்ற அத்தியாயத்தையும் ஓதியிருக்கிறார்கள். சிலவேளை அஃலா என்ற அத்தியாயத்தையும், காஷயா என்ற அத்தியாயத்தையும் ஓதியுள்ளார்கள். அறிவிப்பவர்:அபூவாகித் (ரலி) ஆதாரம்: அஹமத், முஸ்லிம், திர்மிதி,நஸயீ,இப்னு மாஜா.
இரு பெருநாள் தொழுகைகளில் ‘ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா’ என்ற அத்தியாயத்தையும்,’ஹல் அதாக்க ஹதீஸுல் காஷயா’ என்ற அத்தியா யத்தையும் ஓதுவார்கள்;. அறிவிப்பவர்:ஸமுரா(ரலி),ஆதாரம்: அஹ்மத்,,தப்ரானி.
குத்பா உரை                                                                                                                                                          தொழுகை முடிந்த பிறகே குத்பா உரை நிகழ்த்தவேண்டும்.
நபி(ஸல்) அவர்கள்,அபூபக்ர் (ரலி),உமர்; (ரலி) ஆகியோர் குத்பாவுக்கு முன்பே இரண்டு பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றுவார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரி,,முஸ்லிம்,திர்மிதி,நஸயீ.
குத்பா உரையை கேட்பது                                                  ஜும்ஆ உரையைப் போன்று பெருநாள் குத்;பா உரையையும் காது தாழ்த்திக் கேட்பது அவசியமாகும். இன்று இதன் முக்கியத்துவம் புரியாது பலர் குத்பாவைக் கேட்காது எழுந்து சென்று விடுகின்றனர்.
கன்னிப்பெண்கள்,மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இமாமின் குத்பா-பிரச்சார-உரைiயில் கலந்து கொள்ளவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது பெருநாள் உரையைக் கேட்பதற்குத்தானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல.
15. தொழுமிடம்முஸல்ல                                                                                                               பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் (ஈத்;காஹ்) திடலில் தொழுதுள்ளதால் பள்ளியில் தொழாமல் திடலில் தொழுவதே சிறப்பாகும்.
நபி(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்காக) ‘முஸல்லா’ என்னும் திடலுக்குப் புறப்படுவார்கள். அறிவிப்பவர்:இப்னு உமர் (ரலி) ஆதாரம்:புகாரி
நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவைதான் (மழைகாரணமாக) பள்ளியில் தொழுதுள்ளார்கள்.
16. பெருநாளில் பிரார்த்தனை (துஆ)
பெருநாள் தொழுகையும்,உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும், மாதவிடாய்ப் பெண் உட்பட அனைத்துப் பெண்களும் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும்.
பெருநாளில் (தொழும் திடலுக்கு நாங்கள் புறப்படவேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும்,மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம்.பெண்கள் ஆண்களுக்குப்பின்னால் இருப்பார்கள்.ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆ செய்வார்கள்.அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்துவத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) ஆதாரம்: புகாரி-971.
இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் நாம் பிரார்த்தனை (துஆ) செய்து கொள்ள வேண்டும்.
17. ஈத் பெருநாளும் ஜும்ஆவும் ஒன்றாக வந்தால்
ஈத் பெருநாளும் ஜும்ஆவும் ஒரேநாளில் ஒன்றாக வந்தால், ஈத் தொழுகையை நிறைவேற்றியவர் ஜும்ஆத் தொழுகையை தெழாமலிருக்கலாம். அல்லது இரண்டையும் தொழலாம்.
18. பெருநாளன்று வாழ்த்து தெரிவிப்பது
நான் அபூ உமாமா(ரலி) போன்ற நாயத் தோழர்களுடன் இருந்தபோது பெருநாள் தொழுகை முடிந்து திரும்பியதும் அவர்களில் ஒருவருக்கொருவர்,تقبل الله منا ومنك       
‘தகப்பலல்லாஹு மின்னா, வமின்க’ என்று கூறிக்கொள்வார்கள். ஏன முஹம்மது இப்னு ஸியாத் (ரஹ்) அறிவிக்கிறார்கள். அஹ்மது இப்னு ஹன்பல் இந்த ஹதீஸின் இஸ்னாத் தரம் சிறந்தது எனக் கூறுகிறார்கள். (அல்ஜவ்ஹருந்நகிய்யி 3-320)
19. மார்க்கத்திற்கு முரணானவை நிகழாது காத்தல்
‘பெருநாள் என்றாலே பொழுது போக்கும் நாள்! ஆரவாரமிக்க நாள்! உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கும் நாள்’ எனக் கருதிக் கொண்டு நம்மில் பலர் வேடிக்கை விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும், திரைப்படங்களைப் பார்ப்பதிலும் பொழுதைக்கழிக்கின்றனர். ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கலந்து பலநிகழ்சிகளில் பங்கேற்கின்றனர்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத நிகழ்ச்சிகள், வைபவங்களை தவிர்த்து  மாண்பார் துல்ஹஜ்ஜின் பேறுகள் அனைத்தையும் பெறுவதற்கும், அந்நாட்களில் அதிகமதிகமாக வணக்கங்களில் ஈடுபடுவதற்கும் வல்லான் அல்லாஹ் அருள் புரிவானாக!

கருத்துரையிடுக