இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்

2008ஆம் ஆண்டு தமிழ் பிரவாகம் இணையக் குழுமத்தின் ஆண்டு விழாவில் அப்துல் ஜப்பாருடன் இணைந்து சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 'இணையத்தில் முத்திரை பதிக்கும் தமிழர்கள்' என்ற பொருளில் உரையாற்றினேன். அந்தத் தொகுப்பில் பின்னர் மேலும் சிலரையும் சேர்த்தேன். அந்த உரையின் சுருக்க வடிவம் இங்கே:

வரலாற்றில் நாம் வாழும் இந்தக் காலமானது, தமிழுக்கு மிகப் பெரிய பொற்காலம் என்பேன். இது வரையான காலக்கட்டத்தில் இப்போதுதான் நான்கில் மூன்று பேர் எழுத்தறிவு பெற்றவர்களாய் இருக்கிறார்கள். தமிழ்த் தரவுகள் வேறு எப்போதையும் விட இப்போதுதான் மிக அதிகமாகச் சேமிக்கப்படுகின்றன. அச்சிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம்.... என இவ்வளவு அதிகமான ஊடகப் பரவல், வரலாற்றில் இப்போதுதான் முதன்முதலில் நிகழ்ந்துள்ளது. நுணுக்கமான பற்பல துறைகள் தோன்றியுள்ளன. அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் இலட்சக்கணக்கான புதிய கருவிகள் பிறந்துள்ளன. இவற்றினால், தமிழர்கள் தங்கள் ஆளுமையை உலகம் முழுவதும் நிலைநிறுத்தி உள்ளார்கள்.

இந்தப் பின்னணியில் இணையத்திலும் தமிழர்கள் முத்திரை பதித்து வருகிறார்கள். அவர்களுள் சிலரை இங்கு எடுத்துக் காட்டுவதில் மகிழ்கிறேன்.

தமிழில் தனித்துவமான முதல் முயற்சிகள்:

* நா.கோவிந்தசாமி (இணையத்தில் தமிழைக் கொணர்ந்தவர்)
* கிருஷ்ணமூர்த்தி (பொன்விழி ஓசிஆர், பொன்பென் - கையெழுத்து உணரி உள்ளிட்ட கருவிகள்)
* கணேஷ்ராம் (செல்பேசியில் நூலகம், இதர செல்பேசிச் சேவைகள்)
* கணேஷ் பத்மநாபன் (http://www.voicesnap.com)
* சந்தோஷ் தொட்டிங்கல் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* ஏ.ஜி.ராமகிருஷ்ணன் (எழுத்திலிருந்து குரலுக்கு மென்பொருள்)
* விஜயதீபன் (தாயம், பல்லாங்குழி ஆகியவற்றைக் கணினியில் விளையாடும் வழியில் ஆக்கியவர்)
* நாகராஜன் (இணையவழியில் இலவசக் கல்வி)
* பத்ரி சேஷாத்ரி (ஒலி நூல்கள் உருவாக்கியவர்)
* காசி ஆறுமுகம் (தமிழ்மணம்.காம் - திரட்டி)
* ஆமாச்சு (கட்டற்ற மென்பொருள்கள்)

தமிழில் மின்னாக்கம்:

* கல்யாணசுந்தரம் குழுவினர் (மதுரைத் திட்டம்)
* நா.கண்ணன் குழுவினர் (தமிழ் மரபு அறக்கட்டளை)
* கோ.சந்திரசேகரன் (சென்னை லைப்ரரி.காம் - தமிழ் நூல்கள் மின்னாக்கம்)
* பொள்ளாச்சி நசன் (1000க்கும் மேற்பட்ட மின்னூல்கள் ஆக்கியவர் - ஆங்கிலம் வழி தமிழ் கற்பிப்பவர்)
* நூலகம்.ஆர்க் குழுவினர் (http://noolaham.org)
* மறவன்புலவு க.சச்சிதனந்தன் (தேவாரம்.ஆர்க், தமிழ்நூல்.காம்)

தமிழில் எழுதி, எழுத்துரு மாற்றிகள்:

* சுரதா யாழ்வாணன் (பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றி)
* விஸ்வநாதன் (அழகி - ஆங்கில ஒலிபெயர்ப்புவழி தமிழ்த் தட்டச்சு)
* முகுந்தராஜ் (இ-கலப்பையில் பங்களித்தவர்)
* ஹாய் கோபி (எழுத்துரு மாற்றி, பல்வகை தமிழ் மென்பொருள்கள்)
* சர்மா (ஃபிரெஞ்சு - தமிழ் அகராதி, பல்வகை தமிழ் மென்பொருள்கள் )
* நாகராஜன் (என் எச் எம் எழுதி, எழுத்துரு மாற்றி)

அரசு சார்ந்து இயங்குபவர்கள்:

* எல்காட் குழுவினர் (http://www.elcot.in)
* தமிழ் இணையப் பல்கலைக் குழுவினர் (http://tamilvu.org)
* தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை (http://www.textbooksonline.tn.nic.in)
* தமிழகச் சுற்றுலாத் துறை (http://www.tamilnadutourism.org/virtualtour/index.html)
* தமிழகப் பத்திரப் பதிவுத் துறை (http://www.tnreginet.net)... உள்ளிட்ட துறைகள்.

தனி நபர்களுடன் அரசுத் துறைகளையும் குறிப்பிடக் காரணம், அவற்றின் முயற்சிகள், வலுவான பயன்களை அளித்துள்ளமையாலேயே.

மேலும் பலரும் இருப்பினும் என் நினைவில் இப்போது உள்ள சிலரை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன். தமிழ் இணையத்தில் இயங்கும் பலரும் ஏதோ ஒரு வகையில் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை அளித்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் நான் பெரிதும் போற்றுகிறேன். வாழ்த்துகிறேன். நன்றி பாராட்டுகிறேன். அவர்களின் முயற்சிகளால் தமிழ், பல மடங்குகள் முன்னேறியுள்ளது என உறுதியாக நம்புகிறேன். இந்த முயற்சிகள் நீளட்டும். இவர்களைப் பார்த்து மேலும் பலரும் இந்தத் திசையில் பயணிக்கட்டும். ஒவ்வொருவரிடமிருந்தும் புதுமைகள் உதிக்கட்டும்.

இவர்களின் உதவியோடு, 100% எழுத்தறிவு; கல்வியில் உயரிய நிலை; பண்பாட்டில் செழுமை, தகவல் தொடர்பில் முதலிடம், அறிவியல் - நுட்பங்களில் அகிலம் வியக்கும் புத்தாக்கம், வரலாற்றுப் பதிவுகளில் கூர்மை, வாழ்க்கைத் தரத்தில் உன்னத நிலை, பன்னாட்டு உறவில் புதிய அத்தியாயம், மக்களாட்சிப் பண்புகளை மதிக்கும் பக்குவம்.... ஆகிய இலக்குகளை விரைவில் எட்டுவோம்.

கருத்துரையிடுக